Holy Trinity

Holy Trinity

Wednesday, January 25, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //

ஸ்லோகம் - 3


முகுந்த மூர்த்நா ப்ரணி பத்ய யாசே
பவந்த மேகாந்த மியந்த மர்த்தம் /
அவிஸ்ம்ருதி த்வச் சரணாரவிந்தே
பவே பவே மேஸ்து பவத்ப்ரஸாதாத் //


ஹே முகுந்தா...! உன்னை என்றென்றும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...! நான் உன்னிடம் கேட்பதெல்லாம் இது தான்...! அதாவது, என்னுடைய ஒவ்வொரு பிறவியிலும், உன் அருளால், உன் திருவடித் தாமரைகளை மறந்து விடாமல் இருக்க வேண்டும்...! இந்த ஒன்றை மட்டுமே நான் உன்னிடமிருந்து யாசிக்கிறேன்...!


(நாம் பகவானிடம் மிகவும் அற்பமான, உலகாயதன பொருள்களை கேட்காமல், அவனை என்றென்றும் மறக்காமல் இருக்கும் மனத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதை குலசேகரர் இங்கு தெரிவிக்கிறார்.

இவரே தன்னுடைய 'பெருமாள் திருமொழி' என்ற பாசுரத் தொகுப்பில் திருவேங்கடமுடையானிடம் தன்னை ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மீனாகவோ, மரமாகவோ, வாயிற் படியாகவோ அல்லது ஏதாவது ஒரு பொருளாகவோ பிறக்க வைத்தாலும், அவன் எழுந்தருளியிருக்கக் கூடிய திருமலையின் சமீபமாகவே தன்னை வைக்கும்படி வேண்டுகிறார்.)

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //

ஸ்லோகம் - 2


ஜயது ஜயது தேவோ தேவகீ நந்தநோயம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ஸ பிரதீப:/
ஜயது ஜயது மேக ஸ்யாமள கோமாளாங்கோ
ஜயது ஜயது ப்ருத்வி பார நாசோ முகுந்த: //



தேவகிக்கு குழந்தையாகத் தோன்றிய கண்ணன் வெற்றி கொள்வானாக..! ஆயர் குலத்திற்கே அணியாகிய விளங்கும் க்ருஷ்ணன் வெற்றி கொள்வானாக..! மிருதுவான, தளிர் போன்ற மேனியையுடைய அந்த முகில் வண்ணன் வெற்றி கொள்வானாக..! இந்த பூமியின் பாரத்தை நீக்க அவதரித்த அந்த முகுந்தன் வெற்றி கொள்வானாக..!


(இந்த ஸ்லோகத்தின் மூலமாக குலசேகரர் கண்ணனுக்கு பல்லாண்டு பாடி மங்களாசாசனம் செய்கிறார். அனைத்து மங்களங்களுக்கும் மூல காரணமாக விளங்கும் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியின் இதயத்தை வென்ற அழகிய மணவாளனாக விளங்கும் முகுந்தனுக்கே வெற்றி என்று ஜெய கோஷம் எழுப்புகிறார்.

பகவானுடைய சரணாரவிந்தங்களே நம் அனைவரையும் காக்க வல்லது. அசையும், அசையா பொருட்கள் அனைத்திலும் வியாபித்து, நீக்கமற நிறைந்திருக்கும், அந்த தன்னிகரற்ற பரம்பொருளாகிய திருமாலுக்கு, நாம் பல்லாண்டு பாட வேண்டும் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறியலாம்.)

Tuesday, January 24, 2012

Sri Mukunda Mala - 1


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //

ஸ்லோகம் - 1

ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பாக்த ப்ரியேதி பவலுண்டன கோவிதேதி /
நாதேதி நாக ஸயநேதி ஜகந்நிவாசே
த்யாலபினம் பிரதிபதம் குரு மே முகுந்த //


முகுந்தா (முக்தியை அளிப்பவனே)..! ஸ்ரீ வல்லபா (லக்ஷ்மி நாயகா)..! வரமளிக்கும் வரதா..! தயாபரா (பெரும் கருணையுடையவனே)..! பக்தப்ரியா (அடியார்களுக்கு ப்ரியமானவனே)..! பிறவித் துன்பத்தை நீக்கும் பரந்தாமா..! என்னை ஆளும் நாதா..! ஆதிசேஷனாகிய மஞ்சத்தில் சயனித்து இருப்பவனே..! இப்பிரபஞ்சத்தில் எங்கும் பரந்து விரிந்து உறைந்திருக்கும் ஜகந்நிவாசா..! என்றெல்லாம், எப்போதும் உன் திவ்ய நாமங்களையே பாடுபவனாக (ஜபிப்பவனாக) என்னை வைப்பாயாக..!

(நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளையும், பகவானுடைய நாமங்களின் மகிமைகளையும் எடுத்துக் கூறுவதற்காகவே பாடப்பட்டது 'முகுந்தா மாலா' ஸ்தோத்திரம் ஆகும். இந்த 40 சுலோகங்களும் முகுந்தனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாமாலை ஆகும். இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் கண்ணனின் அழகு, கல்யாண குணங்கள், சம்சாரக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் ஜீவர்களுக்கு கண்ணனே கரை சேர்க்கும் தோணி, பிறவிப் பிணிக்கு முகுந்தனே மருந்து என பல உயர்ந்த கருத்துக்களைப் பற்றி பக்தி மணம் கமழ உரைக்கின்றன. இந்த முதல் ஸ்லோகத்தில் பல நாமங்களை எடுத்துக்கூறியுள்ளார் குலசேகரப் பெருமாள்.)

Monday, January 23, 2012



ஸ்ரீ:
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ ராமகிருஷ்ண திருவடிகளே சரணம்

ஸ்ரீ லக்ஷ்மி நாதனும், சர்வேச்வரனும், கருணைக்கடலுமான, பகவான் ஸ்ரீமன் நாராயணன் இந்த நிலவுலகிலே மாயையில் சிக்குண்டு வெளியேறத்துடிக்கும் ஜீவர்கள் எந்நாளும் திருந்தி பக்தி நெறியை பற்றிக்கொண்டு தன்னடி சேருவதற்காகவே தன்னுடைய பரிவாரங்களை இந்த பூமியில் ஆழ்வார்களாக அவதரிக்க வைத்தான். அவர்களே பன்னிரு ஆழ்வார்கள் என போற்றப்படுகின்றனர்.

அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஸ்ரீ குலசேகர பெருமாள் என்றும், ஸ்ரீ குலசேகர ஆழ்வார் என்றும் அழைக்கப்படுகின்ற குலசேகர மன்னன், திருமாலின் திருமார்பில் திகழும் அணியான கௌஸ்துபம் என்னும் மணியின் அம்சமாகவே கி.பி. எட்டாம் நூற்றாண்டு, மாசி மாதம், புநர்பூச நட்சத்திரத்தில் இவ்வுலகில் அவதரித்தார். இவர், சேர நாட்டிலுள்ள கொல்லி நகர் என்ற திருவஞ்சிக்களம் என்னும் நகரைத் தன் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த அரசர் ஆவார். இவர் அரச பதவிகளையும், போகங்களையும் துறந்து, திருவரங்கம் சென்று, திருமாலின் திருவடிகளைப்பற்றி, அவனுடைய சேவையிலேயே என்றென்றும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தேனினும் இனிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள 'பெருமாள் திருமொழி' என்னும் அற்புதமான 105 பாடல்களை படைத்தார். இவரால் பாடப்பெற்ற திவ்ய தேசங்கள் மொத்தம் ஒன்பது ஆகும். இவர் இளமை முதலே பகவானுடைய திருஅவதாரங்களில் ஒன்றான, ராமாவதாரத்தில் தீராத காதலுடையவராய் திகழ்ந்தார். இவரே வடமொழியில் 'ஸ்ரீ முகுந்த மாலா' என்ற 40 பாடல்களாலாகிய ஸ்தோத்திரத்தையும் அருளிச்செய்துள்ளார்.

பரம்பொருளாகிய இறைவனின் உயர்ந்த நிலையையும், ஜீவர்களின் தாழ்ந்த நிலையையும் உணர்ந்து, நம் அனைவரையும் இந்த பிறப்பு இறப்பு என்னும் கரை காண முடியாத சம்சாரக்கடலில் மூழ்கிவிடாமல் காத்து, கரையேற்ற வல்லவன் அந்த கண்ணன் ஒருவனே என அறிந்து, மனமுருகிப்பாடிய ஸ்தோத்திரமே இந்த முகுந்த மாலை. இந்த பாடல்களில், குலசேகரர் எம்பெருமானுடைய பற்பல நாமங்களின் ஏற்றத்தையும், மகிமையையும் அற்புதமாகப் பாடியுள்ளார். இந்த பாடல்களை அனுதினமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் அனைவருடைய பாவங்களும் தீயினில் பட்ட தூசு போல ஒன்றுமில்லாமல் போகும் என்பது திண்ணம்.

அடியேனுடைய சில நண்பர்களின் அன்பான வேண்டுகோளின் பேரில் இந்த 'ஸ்ரீ முகுந்தா மாலை' என்னும் இந்த பாடல் தொகுப்பினை சிறிது சிறிதாக வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க முனைகிறேன். இந்த மொழி பெயர்ப்பினை நேரடி மொழி பெயர்ப்பாகக் கருதாமல், சுதந்திர மொழி பெயர்ப்பாக கருதும்படி கேட்டுக்கொள்கிறேன். அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன் புகழைப் பாடவோ அல்லது எழுதவோ முடியும் என்பதனால், கண்ணன் கழலிணையே இறைஞ்சி, அவன் கருணையை வேண்டுகிறேன். இதில் இருக்கும் நிறைகளைக் கொண்டாட அடியேனுக்கு எந்த உரிமையும் கிடையாது. தவறுகளுக்கு நானே முழு பொறுப்பு. இதில் ஏதேனும் குற்றம் குறை இருப்பின் அன்பர்கள் கருணை கூர்ந்து சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள அடியேன் சித்தமாயிருக்கிறேன்.

இந்த முகுந்த மாலை ஸ்தோத்திரத்தை அனைவரும் படித்து இன்புற்று, மனத்தில் இருத்தி, இனிதே பக்தி நெறியைப் பற்றி வாழ்ந்து, நற்கதி அடைய, ஜகத்காரணனும், சர்வேச்வரனும், சரணாகத வத்சலனுமான, ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தாசன்,
சுவாமி கேசவானந்தா

(40 சுலோகங்களும், ஒவ்வொரு ஸ்லோகமாக, தனித்தனி மின்னஞ்சல்களில் அனுப்பப்படும்)