ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 10
ஸரஸிஜ நயநே ஸ ஸங்க சக்ரே
முரபிதி மா விரமஸ்வ சித்த ரந்தும் /
ஸுகதரம பரம் ந ஜாது ஜாநே
ஹரிசரண ஸ்மரணாம்ருதேந துல்யம் //
ஹே மனமே...! மலர்ந்த தாமரை போன்ற கண்களை உடையவனும், சங்கு சக்கரங்களைத் தன் திருக் கைகளில் ஏந்தியுள்ளவனும், முரன் என்ற அசுரனை அழித்தவனுமான, அந்த முராரியை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருப்பாயாக..! அந்த ஹரியினுடைய திருவடிகளை த்யானிப்பது என்பது, அமுதத்திற்கு ஒப்பானது...! இந்த மேலான சுகத்திற்கு சமமானதாகவோ அல்லது உயந்ததாகவோ இவ்வுலகத்தில் வேறு எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை...!
( எவன் ஒருவன் தன் மனத்தால் இறைவனை அனுதினமும் வணங்குகிறானோ, அவனுடைய பாவங்களும் களையப்படுகின்றன..! அதனால் தான் அனைத்து ஆழ்வார்களும் தன் பாடல்களில் இறைவனை உள்ளத்தால் துதி செய்யும்படி கூறியுள்ளனர் .
ஆண்டாள் தன் திருப்பாவையில் 'வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க' என்று பாடுகிறாள். நம்மாழ்வார் தன் திருவாய் மொழிப் பாசுரத்தில் 'அவன் துயரறு சுடரடி தொழு தெழு என் மனனே' என்று பாடிப் பரவுகின்றார்.
நாரத பஞ்சராத்திரம்,
"அந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா தத: கிம்
நாந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா தத: கிம்", என்று கூறுகிறது.
அதாவது, "மனதிலும் வெளியிலும் ஹரியைக் கண்டால் தவம் எதற்கு..?
உள்ளும் புறமும் ஹரியைக் காணாவிட்டால் தவத்தால் யாது பயன்..? " )
No comments:
Post a Comment