Holy Trinity

Holy Trinity

Saturday, March 10, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 9  

கர   சரண   ஸரோஜே    காந்தி    மந்   நேத்ர   மீனே  
ஸ்ரமமுஷி புஜவீசி வ்யாகுலே அகாத மார்கே /
ஹரி  ஸரஸி  விகாஹ்ய ஆபீய  தேஜோஜலௌகம்
பவ  மரு   பரிகிந்ந   கேத   மத்ய   த்யஜாமி      // 
 
'ஹரி'   என்னும்   தடாகத்தில்,   பகவானுடைய   திருக்  கைகளும், திருவடிகளும்   தாமரை   மலர்களாக   பூத்துள்ளன...!    அவனுடைய காந்தியுடைய   திருக் கண்களே   மீன்களாக   நீந்தி  விளையாடுகின்றன...!   அவனுடைய   உயர்ந்த   தோள்களே   அத்  தடாகத்தில்   எழும்   அலைகளாக  ஆர்ப்பரிக்கின்றன...!   அவனுடைய   திருமேனி   ஒளியே   அக்குளத்தின் ஜலம்...!    பிறப்பு,  இறப்பு   என்ற   ஸம்சாரமாகிய,   பயங்கரமாக  சுட்டெரிக்கும்  பாலைவனத்தில்  அலைந்து  திரிந்த  நான்,  இந்த   'ஹரி'யாகிய  திருக்  குளத்தில்   நன்கு   மூழ்கி,  பகவானின்   திவ்ய  மேனியின்   ஒளியாகிய   குளிர்ந்த   ஜலத்தை   நன்கு   அருந்தி,   எனது   தாகத்தைப்   போக்கிக் கொள்கிறேன்...!

(கண்ணனையே   இங்கு   அழகான   பொய்கையாக   உருவகப்   படுத்திப் பாடியிருக்கிறார்  குலசேகரர்.  சுட்டெரிக்கும்  வெய்யிலின்  வெம்மையால் ஏற்படும்   தாகத்தைக்   குளிர்ந்த   நீரானது   எவ்வாறு   போக்குமா,   அது போலவே,  ஜனன   மரணம்   என்ற   பயங்கரமான   பாலைவனத்தில்,  
திக்கு   தெரியாமல்   அலைகின்ற   நம்மைப்   போன்ற   மனிதர்களுக்கு  இறைவனே   குளிர்ந்த   நீராக   இருந்து   நம்   வாட்டத்தைப்   போக்குகிறான்.  

நாம்  பூர்வ  ஜன்மங்களில்  சேர்த்து  வைத்துள்ள  பாவ  புண்ணியங்களைத் தொலைப்பதற்கு  இவ்வுலகில்  பிறப்பெடுத்தாலும்,  மீண்டும்  மீண்டும் அவற்றை  சேர்த்துக்  கொண்டேயிருக்கிறோம்.  இவ்வாறு,  முடிவில்லா  ஜன்மங்களை  எடுத்துக்கொண்டே  இருக்கிறோம்.  நாம்,  இந்த  உலகத்தில் பிறந்து,  அறியாமை  என்ற  இருளில்  அகப்பட்டு,  சிற்றின்பங்களிலும்,  போகப்  பொருட்களின்  மீதும்  மனத்தை  வைத்து,  அவை  தரும்  சுகமே  மேலானது  என்று  கருதி,  நம்மை  படைத்த  தந்தையாகிய,  ஜகத் காரண  பூதானாக  விளங்கும்,  பகவானை  மறந்து  விடுகிறோம்.  அவ்வாறு  அல்லாமல்,  இறைவனை  எப்பொழுதும்,  உடலாலும்,  மனதாலும்  போற்றி வணங்க  வேண்டும்.  

"சேற்றில்  வாழும்  ஒருவகை  மீன்,  சேற்றுக்குள்ளேயே  இருந்தாலும்,  அதன்  மீது  சேறு  ஒட்டிக் கொள்வதில்லை.  அது  போலவே,  ஒரு  பக்தன்  இந்த  உலகத்தில்  வாழ்ந்தாலும்,  அஞ்ஞானமாகிய   நிழல்  அவன்  மீது  விழுவதில்லை",  என்று  ஸ்ரீ  ராமகிருஷ்ணர்  கூறியுள்ளதை  நாம் மனதில்  கொள்ள  வேண்டும்.) 

No comments:

Post a Comment